இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான தொழில், அந்த தொழிலுக்குத் தேவையான படிப்பு என்ற சுதேசிப் பார்வை, அணுகுமுறையில் நமது உயர் கல்வி அமையவில்லை. கல்வி தனியார் மயமான பிறகு தகவல் தொழில்நுட்ப முதலாளிகளுக்குத் தேவையான பொறியியல் படிப்புக்களை மக்கள் தமது சொந்த செலவில் படித்து விட்டு காத்திருக்கும் மாட்டுச் சந்தை போல மாற்றப்பட்டிருக்கின்றனர்.
பட்டம் பெறும் அனைவருக்கும் அல்லது பெரும்பான்மையினருக்கும் தகுதியான வேலைகள் கிடைப்பதில்லை. அறிவுக் கொழுந்தான மாணவர்களை மட்டும் பெரிய நிறுவனங்கள் கொத்திச் சென்றுவிடுகின்றன. மற்றவர்கள் மாயையை சுமந்து கொண்டு ஏதோ ஒரு வேலை கிடைக்குமா என்று தவிக்கின்றனர்.
மருத்துவத்தில் இளங்கலை படிப்பதால் எந்தப் பயனுமில்லை என்று ஆகியுள்ளதால் முதுகலை படித்தால்தான் பத்து பதினைந்து ஆண்டுகளில் ஒரு தேர்ந்த மருத்துவராக தலைநிமிரமுடியும் என்றாகி விட்டது. அரசு கல்லூரிகளில் முதுகலை இடங்கள் குறைவாக இருக்க தனியார் கல்லூரிகளிலோ அதன் விலை கோடிகளில் இருக்கிறது. சுகாதாரத்திலும் அரசு பங்கு கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டு வருகிறது. சான்றாக வருடம் 750 கோடி ஒதுக்கி காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதை அரசு மருத்துவ மனைகளில் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்று கூட சொல்லவில்லை. தனியாரிடத்திலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றால் காப்பீடு, மருத்துவமனை இரண்டிலும் தனியார் நிறுவனங்கள் கொள்ளைக்குத்தான் உதவும்.
இதற்குமேல் பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவரிடம் மிகக் கடுமையான போட்டி மனப்பான்மையை இந்தக் கல்வி அமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தபட்சம் பொறியியல் படிப்பு கூட படிக்க முடியாவிட்டால் எதிர்கால வாழ்வு இல்லை என்ற அவநம்பிக்கை நமது இளையோரிடத்தில் அழுத்தமாக திணிக்கப்பட்டிருக்கிறது. ஏழைகள், நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் கூட கடன் வாங்கியாவது படித்தாக வேண்டும் என்ற நிலை சகஜமாகி வருகிறது.
தனியார் சுயநிதிக்கல்லூரிகளெல்லாம் இந்த போட்டி மனப்பான்மையை வைத்து நன்கு கல்லா கட்டிவருகின்றன. தமிழகத்தில் சுமார் பத்து முதல் இருபது கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை பெரும் நிறுவனங்கள் வளாக நேர்முகத் தேர்வுக்காக சீண்டுவதில்லை. ஐ.டி துறையிலும் இப்போது சம்பளம் என்பது முன்பைவிட வெகுவாக குறைந்த நிலையில் பெரும்பான்மையான மாணவர்கள் தமது படிப்பால் எதையும் பெற முடியவில்லை என்ற நிலைதான் இருக்கிறது.
இச்சூழலில் இந்த மாயையை காப்பாற்றிக் கொண்டு எல்லா மோசடிகளையும் செய்து காலி இடங்களை நிரப்புவதற்கு கல்வி முதலாளிகள் விரும்புகின்றனர். வெளி மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களை தரகர்களாக்கி அவர்கள் ஊர்களிலிருந்து மாணவர்களை பிடித்து வந்தால் கமிஷன் என்று சில மாணவர்களை இவர்கள் மாமாக்களாக்கியிருக்கின்றனர். தரகர்களான இந்த மாணவர்களின் போட்டியில் ஒரு மாணவனே கொல்லப்பட்டிருக்கிறான்.
தென்மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தமிழக கோட்டாவில் இடங்களைப் பெறுவதற்காக போலியாக தமிழக இருப்பிட சான்றிதழ்களை உருவாக்கி இடம் பிடித்ததும் முன்பு மட்டுமல்ல, இப்போதும் நடக்கிறது. அதேபோல என்.ஆர்.ஐ கோட்டாவிலும் வருடந்தோறும் மோசடி நடக்கிறது. எப்படியாவது இடத்தை நிரப்ப வேண்டும் என்று வெறி பிடித்தலையும் கல்வி முதலாளிகள்தான்
நன்றி வினவு....
http://www.vinavu.com/2010/07/20/marksheet-fraud/